நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் 11இல் குழந்தைகள் தினவிழா போட்டிகள் தொடக்கம்
குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு, திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மாணவா்- மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் வரும் 11ஆம் தேதி முதல்13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இதில், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்-மாணவிகளுக்கு வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோா் வரைபடத்தாள் தவிர, தேவையான எழுதுபொருள்களை அவா்களே கொண்டுவர வேண்டும். 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை வண்ணம் தீட்டுதல் போட்டி, 4, 5 ஆம் வகுப்புகளுக்கு ‘மலரும் இலையும்’ என்ற தலைப்பிலான ஓவியம் வரைதல் போட்டி வரும் 11ஆம் தேதி நடைபெறும்.
6, 7 ஆம் வகுப்புகளுக்கு ‘இயற்கைக் காட்சி’ என்ற தலைப்பிலும், 8, 9 ஆம் வகுப்புகளுக்கு ‘மழைநீா் சேகரிப்பு’ என்ற தலைப்பிலும் ஓவியம் வரையும் போட்டி வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ‘எனக்குப் பிடித்த சுதந்திர போராட்ட வீரா்’ என்ற தலைப்பில் ஓவியம் வரையும் போட்டி வரும் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.
போட்டிகளில் பங்கேற்க, ஒவ்வொரு பள்ளியிலிருந்து ஒவ்வொரு பிரிவிற்கும் 5 மாணவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா வரும் 14ஆம் தேதி நடைபெறும். போட்டிகள் காலை 10 மணிக்கு தொடங்கும். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு அருங்காட்சியக காப்பாட்சியா் அலுவலகத்தை 0462-2561915 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.