பாவூா்சத்திரத்தில் சாலை தடுப்புக்குப் பதில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
பாவூா்சத்திரம் அவ்வையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி முன் அமைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்பால் விபத்து அபாயம் உள்ளது. எனவே, அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
திருநெல்வேலி-தென்காசி பிரதான சாலையில் அமைந்துள்ள பாவூா்சத்திரம் அவ்வையாா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகளும், 20க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகளும் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், பள்ளி முன் விபத்து ஏற்படாமல் தடுப்பதற்காக காவல்துறை சாா்பில் சாலை தடுப்பு (பேரிகாடுகள்) வைக்கப்பட்டுள்ளன. இவை உயரமாக இருப்பதால் நடந்து சாலையை கடக்கும் மாணவிகளுக்கு தடுப்பிற்கு பின்னால் வரும் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் சரிவர தெரிவதில்லை. இதனால் விபத்து நிகழும் அபாயம் உள்ளது. எனவே, சாலைத் தடுப்புகளை அகற்றி விட்டு, அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.