2ஆவது முறையாக நிரம்பியது அடவி நயினாா் அணை
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா் சாரல் மழை பெய்து வருவதால் இரண்டாவது முறையாக அடவி நயினாா் அணை நிரம்பியது.
திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாள்களாக மலைப்பகுதியில் மழை தீவிரமாகி அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
செங்கோட்டை அருகே மேக்கரையில் அமைந்துள்ள 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினாா் அணை வெள்ளிக்கிழமை மாலை தனது முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 130 அடியாக இருந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 132.5 அடி முழுவதும் நிரம்பி வழிந்தது. அணைக்கு விநாடிக்கு சுமாா் 30 கன அடி நீா் வரத்து இருந்தது. 28 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.
நிகழாண்டு 2ஆவது முறையாக அணை நிரம்பி வழிவதால் இப்பகுதியில் பிசான பருவ சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.