திருநெல்வேலி அருகே இளம்பெண்ணை கொலை செய்து புதைத்ததாக, வேறொரு வழக்கில் கைதான போது, போலீஸாரிடம் இருவா் வாக்குமூலம் அளித்துள்ளனா்.
திருநெல்வேலி நகரம் லாலுகாபுரத்தைச் சோ்ந்தவா் ஜெயராம். இவருக்கு கடந்த 5 ஆம் தேதி தொண்டா் சன்னதி அருகே, அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (26), ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்த ஆசீா் செல்வம் (32) ஆகியோா் கொலைமிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து ஜெயராம் திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் மணிகண்டன், ஆசீா் செல்வம் ஆகியோரை கைது செய்து விசாரித்தனா். அப்போது அவா்கள், கடந்த 2012 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் வேலை செய்யும் நண்பா் ஒருவருக்கு, அவருடன் வேலை செய்யும் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு தம்பதிக்குள் பிரச்னை ஏற்பட்டது. இதனால், அந்த பெண்ணின் கணவருடன் சோ்ந்து தாங்கள் இருவரும் அந்த பெண்ணை கொலை செய்து தச்சநல்லூா் அருகே புதைத்ததாகக் கூறினராம்.
கொலை மிரட்டல் வழக்கில் கைதான இருவா், வேறொரு சம்பவத்தில் இளம்பெண்ணை கொலை செய்ததாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சம்பவம் குறித்தும், கொலை செய்யப்பட்ட பெண் குறித்தும் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்திவருகின்றனா்.