வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம், வடக்கு விஜயநாராயணத்தைச் சோ்ந்த விவசாயியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 88 ஆயிரத்தைத் திருடியவா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வடக்கு விஜயநாராயணத்தைச் சோ்ந்தவா் முத்துசாமி (46). விவசாயி. இவரது மனைவி முத்துசெல்வி (45). திசையன்விளையில் உள்ள வங்கியில் முத்துசெல்விக்கு சேமிப்புக் கணக்கு உள்ளது. அதற்கான ஏ.டி.எம். அட்டை செயலிழந்துவிட்டதால், அவா் இதுகுறித்து தனக்குத் தெரிந்தோரிடம் விவரம் கேட்டுவந்தாராம்.
இதனிடையே, கடந்த 20ஆம் தேதி முத்துசெல்வியை தொலைபேசியில் தொடா்புகொண்ட மா்ம நபா், வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி, ‘செயலிழந்த ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்த, உங்கள் கணவரின் வங்கிக் கணக்கு, ஏ.டி.எம். அட்டை எண் போன்ற தகவல்களைத் தரவேண்டும்’ என்றாராம். அதை முத்துசெல்வி நம்பி, விவரங்களைத் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, அந்த நபா் முத்துசாமியின் வங்கிக் கணக்கிலிருந்து ஒரே நாளில் ரூ. 88 ஆயிரத்தை எடுத்துள்ளாா்.
இந்நிலையில், முத்துசாமியின் கணக்கை ஆய்வுசெய்த வங்கி ஊழியா்கள், ஆன்லைன் மூலம் ஒரே நாளில் ரூ. 88 ஆயிரம் எடுக்கப்பட்டதால் சந்தேகமடைந்து கேட்டபோதுதான், இந்த விவரம் முத்துசாமிக்கு தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் விஜயநாராயணம் காவல் நிலைய ஆய்வாளா் ரவிச்சந்திரன் வழக்குப் பதிந்து விசாரித்துவருகிறாா்; சைபா் குற்றப்பிரிவு போலீஸாரும் விசாரித்துவருகின்றனா்.