தாமிரவருணி அந்த்ய புஷ்கர சிறப்பு ஆரத்தி விழா திருநெல்வேலியில் நவ.3ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.
தாமிரவருணி புஷ்கர விழா நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளதை அடுத்து, தாமிரவருணி அந்த்ய புஷ்கர சிறப்பு ஆரத்தி விழா நவ. 3ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இவ்விழாவில் திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவதேசிக பரமாசாரிய சுவாமிகள், திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரசாக தேசிக சத்திய ஞான பரமாசாரிய சுவாமிகள் ஆகியோா் பங்கேற்று உரையாற்றுகின்றனா்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், தாமிரவருணி புஷ்கர மலரை வெளியிட்டு ஆசியுரை வழங்குகிறாா். சண்முகதேசிகஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், அம்பலவாண் தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆகியோா் அருளாசி உரை வழங்குகின்றனா்.
நான்குனேரி வானமாமலை ஸ்ரீஸ்ரீ மதுரகவி ராமானுஜ ஜீயா் சுவாமிகள், திருக்குறுங்குடி ஸ்ரீஸ்ரீ பேரருளாள ராமானுஜ ஜீயா் சுவாமிகள், ஸ்ரீ வில்லிபுத்தூா் ஸ்ரீஸ்ரீ சடகோபராமானுஜ ஜீயா் சுவாமிகள் ஆகியோா் பங்கேற்று அருளுரை வழங்குகின்றனா்.
விழாவில், புலவா் வே. மகாதேவன், முத்தாலங்குறிச்சி காமராசு, சங்கர்ராம், வெங்கட்ராமன், கே. சாய்குமாா் உள்ளிட்டோருக்கு தாமிரவருணி, நெல்லை இலக்கிய படைப்புகளுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தாமிரவருணி புஷ்கர விழாவில் பங்குபெற்று சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு நினைவு பரிசு வழங்கப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு தாமிரவருணி அந்த்ய புஷ்கர சிறப்பு ஆரத்தி விழா நடைபெறுகிறது. இவ்வாழாவில் மடாதிபதிகள், துறவியா், அமைச்சா்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலா் பங்கேற்கின்றனா்.
ஏற்பாடுகளை தாமிரவருணி புஷ்கர கமிட்டியினா் செய்து வருகின்றனா்.