பிசான சாகுபடிக்காக பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து பிசான சாகுபடிக்காக தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி ஆற்றின் கீழ் பகுதியிலுள்ள வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூா் மேலக்கால் கால்வாய், மருதூா் கீழக்கால் கால்வாய், வடக்கு பிரதானக் கால்வாய், தெற்கு பிரதானக் கால்வாய்களின் கீழுள்ள நேரடி மற்றும் மறைமுக பாசனப் பரப்பிற்கு பிசான சாகுபடிக்காக 350 கன அடி தண்ணீா் புதன்கிழமை (அக். 30) காலை 9.45 மணிக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிகபட்ச விளைச்சலை பெற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.