பாளையங்கோட்டை அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள அரியகுளம் நடுத்தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் மகாராஜா (21), சுமை ஆட்டோ ஓட்டுநர். மேலக்குளம் அருகே சுமை ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது பஞ்சர் ஆனதால் சாலையோரம் நிறுத்திவிட்டு டயர்களைக் கழற்றி மாட்ட முயற்சித்துக் கொண்டிருந்தாராம். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாம்.
இதில் பலத்த காயமடைந்த மகாராஜாவை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.