வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் வேளாண் துறை சார்பில் பிரதமரின் சிறப்பு ஓய்வூதியத் திட்ட சேர்ப்பு முகாம் (பிஎம்கேஎம்ஒய்) நடைபெற்றது.
இத்திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறலாம். மாதத் தவணை ரூ. 55 முதல் ரூ. 200 வரை வயதுக்கு ஏற்ப பணம் செலுத்தலாம். விவசாயத் தம்பதி தனித்தனியே இத்திட்டத்தில் சேரலாம். 60 வயதுக்குப் பிறகு மாதந்தோறும் குறைந்தது ரூ. 3,000 வங்கிக் கணக்கில் வரவாகும்.
மேலக்கரிசல்குளத்தில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் க. சக்திவடிவேலவன் தலைமையில் நடைபெற்ற முகாமில் முன்னோடி விவசாயிகள் கண்ணன், ஆரோக்கியசாமி உள்ளிட்டோரும், சிவகிரியில் துணை வேளாண்மை அலுவலர் வைத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகள் சரவணன், கருப்பசாமி உள்ளிட்டோரும், தென்மலையில் உதவி வேளாண்மை அலுவலர் கிருஷ்ணசங்கீதா தலைமையில் நடைபெற்ற முகாமில் விவசாயிகள் அருணாசலம், கருப்பசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
வாசுதேவநல்லூரில் உதவி வேளாண்மை அலுவலர் மாரிராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முத்துராமலிங்கம், வேலுச்சாமி உள்ளிட்டோரும், முள்ளிக்குளத்தில் உதவி வேளாண்மை அலுவலர் பார்வதி தலைமையில் நடைபெற்ற முகாமில் முத்துராஜ், காந்தி உள்ளிட்டோரும், ராயகிரியல் உதவி தொழில்நுட்ப மேலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜீவராஜ், சுந்தரய்யா உள்ளிட்டோரும், புளியங்குடியில் உதவி வேளாண்மை அலுவலர் நயினார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் போபாஸ், ஜெயராஜ், கோயில்பிள்ளை உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.