களக்காடு புலிகள் காப்பகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மலையேறும் பயிற்சித் திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் முன்வர வேண்டும் என மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கடந்த 2013ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த சி. சமயமூர்த்தி, அப்போதைய களக்காடு -முண்டன்துறை புலிகள் காப்பக களஇயக்குநர் சுப்ரத் மஹா பத்ரை-யுடன் இணைந்து களக்காடு புலிகள் காப்பகத்திற்குள்பட்ட களக்காடு தலையணையில் பள்ளி மாணவர்களுக்கு மலையேறும் பயிற்சித் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்தினார். அதன்படி, மலையேறும் பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள 8- 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இணையம் வழியாக பதிவுசெய்யவும் அறிவிப்பு வெளியானது. அதன்படி, 30 மாணவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டு, தலையணை முதல் முதலிருப்பான் வரை 10 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்றனர். அந்த மாணவர்களுக்கு வன உயிரின விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
அந்த முகாமில் பேசிய அப்போதைய ஆட்சியர் சி. சமயமூர்த்தி, பள்ளி மாணவர்களுக்கு வனம் குறித்த புரிதல் ஏற்பட வேண்டும் என்ற வகையில் மலையேறும் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இனி களக்காடு புலிகள் காப்பகத்தில் மாணவர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை மலையேறும் பயிற்சி நடத்தப்படும் என்றார்.
ஆனால், அதன்பிறகு மலையேறும் பயிற்சி நடைபெறவில்லை. வனத் துறையினர் இதில் தனிக்கவனம் செலுத்தவில்லை. கிடப்பில் போடப்பட்ட மாணவர்களுக்கான மலையேறும் பயிற்சித் திட்டத்தை தற்போதைய மாவட்ட ஆட்சியரும், வனத்துறையும் மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என களக்காடு பகுதி பள்ளி மாணவர்கள் ஆர்வம் தெரிவிக்கின்றனர்.