திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே தெற்குபட்டியில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் திருநெல்வேலி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனர்.
மானூர் அருகே உள்ள தெற்குபட்டியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து (65). இவர், மும்பையில் தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஊருக்கு வந்திருந்த இவர் கடந்த 10ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மானூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இக்கொலை தொடர்பாக, தெற்குபட்டியைச் சேர்ந்த தங்கராஜ் (48), சுடலையாண்டி (36) ஆகிய இருவர் திருநெல்வேலி ஐந்தாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரணடைந்தனர். மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர் கடற்கரை, இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.