திருநெல்வேலியில் பாரதியார் உலகப்பொது சேவை நிதியம் சார்பில் பாரதியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
பாரதியாரின் நினைவுதினத்தையொட்டி, திருநெல்வேலி சந்திப்பிலுள்ள அவரது சிலைக்கு புதன்கிழமை முதல் அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதையடுத்து பாரதியார் உலகப்பொது சேவை நிதியம் சார்பில் வியாழக்கிழமை பாரதியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
அமைப்பின் தலைவர் மரியசூசை தலைமை வகித்தார். பொருளாளர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். திருநெல்வேலி வேணுவனம் ரோட்டரி சங்கத் தலைவர் நடராஜன், தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ம.தி.தா. இந்துக் கல்லூரி பேராசிரியை உஷாதேவி, அமைப்பின் செயலர் கோ.கணபதி சுப்பிரமணியன் மற்றும் மாடசாமி, நல்லசிவன், உடையார் உள்ளிட்டோர் பாரதியாரின் சிறப்புகள் குறித்து பேசினர். இதில் பள்ளி மாணவர்-மாணவியர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். துணைச் செயலர் முத்துசாமி நன்றி கூறினார்.