பணகுடியில் பழைய துணி சேமிப்புக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் மினிலாரியும் சேதமானது.
லெவஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் என்பவருக்குச் சொந்தமான பழைய துணி சேமிப்பு கிடங்கு பணகுடி புறவழிச்சாலையில் உள்ளது. இந்தக் கிடங்கிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை புகை வெளியேறியதாம். விடுமுறை என்பதால் கிடங்கில் பணியாளர்கள் இல்லை. இந்த நிலையில், தீ மளமளவென எரிந்ததுடன், கிடங்கின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மினிலாரியிலும் தீ பற்றியுள்ளது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில், வள்ளியூர் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதனிடையே, சம்பவ இடத்தில் விசாரித்த பணகுடி போலீஸார் கூறுகையில், 'சேத மதிப்பு முழுமையாக தெரியவில்லை; தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கிறோம்' என்றனர்.