திருநெல்வேலி மாவட்டத்தில் 22 மையங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வுகள் திங்கள்கிழமை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமைமுதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவர்-மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சியளிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புப் பயிற்சி முகாம் 5 நாள்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளி, கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி, மானூர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்பட மொத்தம் 22 மையங்களில் இம்முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இயற்பியல், தாவரவியல் உள்ளிட்ட பாடங்கள் குறித்து வகுப்புகள் எடுக்கப்பட்டன. இந்த விடுமுறை காலத்துக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சிறப்பு வகுப்புகளை நடத்தவும், நீட் தேர்வை அரசுப் பள்ளி மாணவர்கள் தைரியத்தோடு எதிர்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.