திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறையையொட்டி மாணவர்-மாணவிகளுக்கான பயிற்சி வகுப்புகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இம்மாதம் 24 முதல் அக். 2ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.
இதன் தொடக்கமாக செவ்வாய்க்கிழமை ஓவியப் பயிற்சி நடைபெற்றது. காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி தொடங்கிவைத்தார். சந்திரபாபு முன்னிலை வகித்தார். ஓவிய ஆசிரியர் ஈஸ்வரன் பயிற்சியளித்தார்.
தொடர்ந்து புதன், வியாழக்கிழமைகளில் (செப்.25, 26) கலைப்பயிற்சி நடைபெற உள்ளது. அப்பயிற்சியில் கலர் பேப்பர் கொண்டு அழகிய பொம்மை தயாரித்தல், சிறிய அளவிலான செயற்கை வீணை தயாரித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
27, 28ஆம் தேதிகளில் கண்ணாடி ஓவியப் பயிற்சி நடைபெறுகிறது. 30ஆம் தேதி உல்லன் நூல் கொண்டு அழகிய நாய்க்குட்டி பொம்மை தயாரித்தல் பயிற்சியும், அக். 1ஆம்தேதி ஓவியப் போட்டியும் நடைபெறுகிறது.
அக். 2ஆம் தேதி மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளையொட்டி சிறப்பு ஓவியக் கண்காட்சி மற்றும் பயிற்சியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. மேலும், விவரங்களுக்கு 0462- 2561915 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.