திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே பாப்பான்குளத்தில் உள்ள திருவெண்காடர் வாடாகலை நாயகி கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்க வேல் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
பாப்பான்குளம் வாடாகலைநாயகி உடனுறை திருவெண்காடர் கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்தக் கோயிலில் 1945 இல் கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகு பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து, 2017 இல் சிவனடியார்கள், ஊர்ப் பொதுமக்கள், பக்தர்கள் இணை ந்து கும்பாபிஷேகம் நடத்தினர்.
இந்தக் கோயில் குறித்து அறிந்த பொன் மாணிக்கவேல் செவ்வாய்க்கிழமை கோயிலைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிறகு அவர் கூறியது:
இந்தக் கோயில் கவனிப்பாரற்று இருந்த நிலையைப் பயன்படுத்தி, பழங்கால கல் சிற்பங்கள் பல திருடப்பட்டுள்ளன. மேலும், இந்தக் கோயிலில் உள்ள பல அரியவகை உலோக சிலைகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. கருவறை மற்றும் உத்சவர்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் உடனடியாக பாதுகாப்பான கதவுகள் அமைக்கவேண்டும். மேலும், தென்புறம் உள்ள சுவரின் ஜன்னல் பகுதியை பலமான கம்பிகளைக் கொண்டு மூடி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றார்.
ஆய்வின்போது, ஆழ்வார்குறிச்சி தனிப்பிரிவு காவலர் முருகன், சிவனடியார் ராமச்சந்திரன், கோயில் அர்ச்சகர் சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.