உலக இதய தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி ஷிபா மருத்துவமனையில் இருதய விழிப்புணர்வு கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.
இதய நோய் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி அதன்மூலம் இதய நோய் வராமல் தடுக்கும் நோக்கில் உலகம் முழுவதும் இதய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஷிபா மருத்துவமனையில் இதய விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் எம்.கே.எம். முகம்மது ஷாபி தலைமை வகித்தார்.
இதய விழிப்புணர்வு குறித்து மருத்துவமனையின் தலைமை இதய மருத்துவர் அருணாசலம் பேசியது: இதய நோயை உலக அளவில் குறைப்பதற்காக கருத்தரங்குகள் அரசு, தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றால் நடத்தப்பட்டு வருகின்றன.
சரியான உணவு பழக்கவழக்கம் இல்லாமை, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, புகைப்பிடிப்பது, குடிப்பழக்கம் உள்ளிட்டவை 25 சதவீதம் இதய நோய் வருவதற்கான காரணிகள் ஆகும்.
இருதய நோயில் இருந்து பாதுகாக்க வழிகள்: அனைத்து வயதினரும் உணவை பொரித்து சாப்பிடாமல் அவித்து சாப்பிட வேண்டும். இரவில் அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும். தினமும் 40 நிமிடங்கள் உடலுக்கு வேலை கொடுக்க வேண்டும். குறைந்தது 6 முதல் 8 மணிநேர தூக்கம் அவசியம். மது, புகை இவற்றிற்கு இடங்கொடுக்க கூடாது. மனதை எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்கவேண்டும். பச்சை காய்கறிகள், பழங்கள் இவற்றை உணவாக எடுத்துக்கொள்ளலாம். இவற்றை கடைப்பிடித்தால் இதய நோய் வராமல் தடுக்கலாம். இருதய நோய் இருப்பவர்களும் இதை கடைப்பிடித்தால் மீண்டும் மாரடைப்பு பிரச்னைகள் வராமல் தடுக்கலாம் என்றார்.
நிகழ்ச்சியில், இதயத்தை பாதுகாப்பது குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் இதய நோயாளிகள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மருத்துவமனை இயக்குநர் முகம்மது அரபாத் நன்றி கூறினார்.