களக்காடு மலைப் பகுதியில் கடந்த 2 தினங்களாக பெய்த மழையால் தலையணையில் நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.
களக்காடு மலைப் பகுதியில் நிகழாண்டில் போதிய அளவு மழை பெய்யாததால், தலையணை ஆற்றில் நீர்வரத்து குறைந்தது. பெரும்பாலான நாள்களில் தலையணை வறண்டதால், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து களையிழந்து காணப்பட்டது.
கடந்த ஒரு மாதமாக மலைப் பகுதியில் அவ்வப்போது பெய்துவரும் மழையால் ஒரு வாரம் தண்ணீர் அதிகரிப்பதும், பிறகு வறண்டுபோவதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு தலையணையில் தடுப்பணையைத் தாண்டி விழும் தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைந்தது. எனினும், மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த மழையால் தடுப்பணையைத் தாண்டி தண்ணீர் ஓரளவிற்கு விழுகிறது. தற்போது பள்ளி காலாண்டு விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.