களக்காடு அருகேயுள்ள கீழப்பத்தையில் புறவழிச் சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
களக்காடு பேரூராட்சி கீழப்பத்தையில் சுமார் 1500 பேர் வசித்துவருகின்றனர். இங்கு நகரப் பேருந்து நாள்தோறும் இருமுறை இயக்கப்படுகிறது. களக்காடு மலையடிவாரத்தில் உள்ள வடக்குப் பச்சையாறு அணைக்குச் செல்ல கீழப்பத்தை சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். கீழப்பத்தையில் சாலையின் இருபுறமும் குடியிருப்புகள் நெருக்கமாக அமைந்துள்ளன. ஒரு பேருந்து வரும்போது, எதிரே எந்த வாகனமும் வர இயலாத நிலை உள்ளது. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்து அபாயமும் உள்ளது.
இதை கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புறவழிச் சாலை அமைக்க முடிவுசெய்யப்பட்டது. ஆனால், அதற்கான பணிகள் நடைபெறவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புறவழிச் சாலை திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.