திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்றார் ஆட்சியர் ஷில்பா.
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடுவது குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியது:
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பணிகளை மழைக் காலத்துக்கு முன்பாக தமிழக அரசு தொடங்கியுள்ளது. மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கடந்த ஆண்டு வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதால், கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு வெகுவாக குறைந்தது. நிகழாண்டு அந்தப் பாதிப்பும் இல்லாத வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
நீண்ட நாள்கள் பயன்படுத்தாமல் பூட்டிக் கிடக்கும் வீடுகளில் ஆய்வு செய்து துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாநகரம், சங்கரன்கோவில் நகரம் ஆகிய இடங்களில் டெங்கு தடுப்புப் பணியில் 2091 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கொசு உற்பத்தி தடுப்பு மருந்தான டெமிபால்ஸ் மருந்து 6 ஆயிரம் லிட்டர் கையிருப்பு உள்ளது என்றார் அவர்.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பெ.விஜயலெட்சுமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார், மாநகராட்சி துணை இயக்குநர் இரா.அண்ணா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.