விஜயநாராயணம் பெரியகுளத்தில் முழு அளவில் குடிமராமத்து பணி செய்ய வலியுறுத்தி 20-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் அக். 9ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளனர்.
விஜயநாராயணம் பெரியகுளத்தின் கீழ் 4,500 ஏக்கர் பாசன பரப்பு உள்ளது. இந்தக் குளத்தை நம்பி 20 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் உள்ளனர். இந்தப் பெரியகுளத்தை குடிமராமத்து பணி செய்ய ரூ.15 கோடியில் திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டதாம். ஆனால் தற்போது அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து குடிமராமத்து பணிகளை செய்து வருகிறது. இதனால் முழு அளவில் குடிமராமத்து பணி நிறைவு பெறாது. இந்தக் குளத்தில் மிகமுக்கியமாக செய்யவேண்டிய பணிகளான 3 மடை பகுதியையும் சீரமைத்தல், குளத்தின் கரையின் உள்பக்கம் தடுப்புச் சுவர் கட்டுதல், அளக்கல் தடுப்பு கட்டுதல் பணிகள் முடிக்கப்படவில்லை.
எனவே அரசு முழுஅளவில் நிதி ஒதுக்கீடு செய்து முழு அளவில் குடிமராமத்து பணியை செய்ய வலியுறுத்தி அக். 9ஆம் தேதி குளத்தின் நடுமடைப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக விஜயநாராயணம் பெரியகுளத்து விவசாயியும், முன்னாள் கவுன்சிலருமான முருகன் கூறியது, விஜயநாராயணம், தெற்கு விஜயநாராயணம், சிவந்தியாபுரம், சங்கனாங்குளம், ஆண்டாள்குளம், பிரியம்மாள்புரம், படப்பார்குளம், பெரியநாடார் குடியிருப்பு, சவளைக்காரன்குளம், விஜயஅச்சம்பாடு உள்ளிட்ட 20 கிராம மக்களின் வாழ்வாதாரம் இந்தப் பெரியகுளம் தான்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் குளத்தை பெயரளவில் குடிமராமத்து செய்கிறார்கள். அரசு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முழுஅளவிலும் குடிமராமத்து பணியை செய்து முடிக்கவேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி அக். 9ஆம் தேதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பெரிய குளம் நடுமடைப்பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறோம் என்றார்.