நெல்லை மாவட்டத்தில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கக் கோரிக்கை
திருநெல்வேலி மாவட்டத்தில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டுமென எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
அக்கட்சியின் திருநெல்வேலி மாவட்ட விவசாய அணியின் செயற்குழுக் கூட்டம் மேலப்பாளையத்தில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினா் முல்லை முஹம்மது அலி வரவேற்றாா். மாவட்டத் தலைவா் எஸ்.எஸ்.ஏ. கனி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மானூா் சேக் அப்துல்லா ஆகியோா்சிறப்புரையாற்றினா். சீதைக்குறிச்சி ஹாலித், மஸ்தான், ஹுசைன், பெட்டைக்குளம் சதாம், தெற்குப்பட்டி குட்டி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
அறுவடைக் காலம் நெருங்கி வருவதால் இம்மாவட்டத்தில் கூடுதலாக அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். வேளாண் பொறியியல் துறையில் உள்ள அறுவடை இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். நிதிநிலை அறிக்கைகளில் வேளாண்மைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி விவசாயத்தை மேம்படுத்த வேண்டும். விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.