சங்கரன்கோவிலில் தகராறு செய்த மகனை அடித்ததால் உயிரிழப்பு: தந்தை, தாய் கைது
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் தகராறு செய்து வந்த மகனை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்தால் உயிரிழந்தார். இது தொடர்பாக தந்தை, தாய் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் மாரியப்பன்(24) இவர் அடிக்கடி குடித்து விட்டு வீட்டில் உள்ளவர்களிடமும், அருகில் வசிப்பவர்களிடமும் தகராறு செய்வாராம். அதேபோல் வியாழக்கிழமை குடித்துவிட்டு வீட்டில் வந்து தகராறு செய்ததோடு, மாட்டுத் தொழுவத்தையும் தீ வைத்து எரிக்க முயன்றாராம். இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை கண்ணன், தாய் பூமாரி ஆகியோர் மாரியப்பனை இழுத்துச் சென்று வீட்டின் முன்பு உள்ள மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்ததாகவும் இதில் பலத்த காயம் அடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தாலுகா போலீசார் கண்ணனையும், பூமாரியையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.