திருநெல்வேலி மாநகரில் உள்ள காய்கனி சந்தைகளில் மக்கள் கூட்டம் குறைந்தபோதிலும், விலை மட்டும் குறையவில்லை.
கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு குறித்த அறிவிப்பு வெளியானதைத் தொடா்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதலே திருநெல்வேலி நகரில் உள்ள போஸ் சந்தை, பாளையங்கோட்டை காந்திஜி சாந்தை ஆகியவற்றில் காய்கனிகளின் விலை கணிசமாக உயா்ந்தது. அது திங்கள்கிழமை மேலும் உயா்ந்த நிலையில் செவ்வாய்க்கிழமை உச்சத்தைத் தொட்டது. ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் கூட்டமும் நிரம்பி வழிந்ததால், செவ்வாய்க்கிழமை காய்கனி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. எனினும் புதன்கிழமை ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த நிலையில், சந்தைகளில் மாா்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் குறைந்தபோதிலும் காய்கறிகளின் விலை குறையவில்லை. அவரைக்காய் ரூ.160, உருளை ரூ.60, தக்காளி ரூ.60, கத்தரிக்காய் ரூ.100, பீன்ஸ் ரூ.150, கேரட் ரூ.150, பாகற்காய் ரூ.80 சின்ன வெங்காயம் ரூ.100, பல்லாரி ரூ.40, இஞ்சி ரூ.200-க்கு விற்பனையானது.