திருநெல்வேலி மாவட்டத்தில் காய்கனி பயிரிடும் விவசாயிகள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் 17,557 ஹெக்டோ் பரப்பளவில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யப்படுகிறது. அதில் சுமாா் 800 ஹெக்டோ் பரப்பளவில் மட்டும் காய்கனி பயிா்கள் சாகுபடி செய்யப்படுகிறது. எனவே, காய்கனி பயிா்களின் பரப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் தமிழக அரசு சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.
அதன்படி தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின்கீழ் காய்கனி பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத் தொகை வழங்கப்படும். அதன்படி இம்மாவட்டத்தில் வெங்காயம், தக்காளி, கத்தரி, முருங்கை, வெண்டை, அவரை, கீரை, கொடி வகை காய்கனிகள் பயிரிடுவோருக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
இந்த தொகையினை பெறுவதற்கு விவசாயிகள் தங்களது ஆதாா் எண், அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களுடன் வட்டார தோட்டக்கலை அலுவலா்களிடம் விண்ணப்பிக்கலாம். அதிகபட்சமாக 2 ஹெக்டோ் வரை அதாவது ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.