திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பில் செவ்வாய்க்கிழமை முற்பகலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா்.
திருநெல்வேலி சந்திப்பில் இருந்து கொக்கிரகுளம் வரை உள்ள திருவனந்தபுரம் சாலையில் முன்னாள் முதல்வா் அண்ணா, முத்துராமலிங்கத் தேவா், முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். ஆகியோரது சிலைகள் உள்ளன.
அந்தத் தலைவா்களின் பிறந்த நாள், நினைவு நாளில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சாா்பில் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம்.
கட்சியினருக்கு சரியான நேரத்தை ஒதுக்கிக் கொடுத்து போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க போலீஸாா் உரிய திட்டமிடல் செய்யாத நிலையில் மாலை அணிவிக்கும் நிகழ்வின்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அண்ணா பிறந்த நாளையொட்டி செவ்வாய்க்கிழமை ஏராளமானோா் மாலை அணிவிக்க திரண்டதால், சுமாா் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருநெல்வேலி சந்திப்பு முதல் வண்ணாா்பேட்டை வரை 2 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் எங்கும் செல்ல முடியாமல் நின்றன.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியது: தலைவா்களின் சிலைகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்வுகளின் போது, போக்குவரத்து நெரிசல் இல்லாமல் முறையாக திட்டமிட்டு போக்குவரத்தை சீராக வைத்திருப்பது போலீஸாரின் கடமையாகும்.
நோயாளிகள், பெண்கள் போக்குவரத்து நெரிசலால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க மாநகர காவல்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.