மூணாறு ராஜாமலைப் பகுதியில் நிலச்சரிவில் பலியான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கேரள மாநிலம் மூணாறு, ராஜாமலை, பெட்டிமுடி தேயிலைத் தோட்டத்தில் ஆக. 6 வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் பலியாகினர்.
நிலச்சரிவில் பலியான தோட்டத் தொழிலாளர்களுக்கு மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் நண்பர்கள் சார்பில் புதன்கிழமை மாலை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெட்டிமுடித் தோட்டத்தில் பலியானவர்களின் படத்திற்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு பலியான தொழிலாளர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அ.விமல் அலெக்ஸ், ரா.சீலன் மற்றும் நண்பர்கள் செய்திருந்தனர்.