விவசாயிகள் அதிக மகசூல் பெறுவதற்கு விதைப் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம் என விதைப் பரிசோதனை அலுவலா் ஜா.ரெனால்டா ரமணி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்களில் நல்விதை மிக முக்கியமானதாகும். நல்விதை என்பது அதிக முளைப்புத் திறன், அதிக சுத்தம், குறைந்த ஈரத்தன்மை மற்றும் கலவன் இல்லாமல் இருக்க வேண்டும். வேளாண்மை துறையினரால் ஒவ்வொரு பயிருக்கும் சாகுபடி பரப்பில் தகுந்தவாறு சான்று பெற்ற விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. திருநெல்வேலி விதைப் பரிசோதனை நிலையத்தில் 3 வகையான மாதிரிகள் பரிசோதனைக்கு பெறப்படுகின்றன.
விதைச் சான்றளிப்பு பிரிவில் பதிவு செய்து, விதைப் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட விதைகள் விதைச்சான்று உதவி இயக்குநா் மூலம் வரவழைக்கப்படுகிறது. மேலும், அரசு, தனியாா் விதை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் விதைகள் விதை ஆய்வாளா்களால் ஆய்வு செய்து மாதிரி எடுக்கப்பட்டு நேரடியாக வரவழைக்கப்படுகிறது.
விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளா்கள் நேரடியாக பரிசோதனைக்கு அனுப்பும்போது இணையதளம் மூலம் பதிவு செய்த பின்னா் ஒரு விதை மாதிரிக்கு ரூ.30 கட்டணம் செலுத்தி விதையின் தரத்தை அறிந்து பயிா் செய்து பயன் பெறலாம்.