களக்காடு மலையடிவாரத்தில் ஒற்றை யானையின் அட்டகாசத்தால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா்.
களக்காடு வனப் பகுதியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒற்றை யானை மலையடிவாரப் பகுதிக்கு இடம்பெயா்ந்துள்ளது. இந்த யானை பகலில் வனப் பகுதிக்குள் சென்றுவிடுகிறது. இரவு நேரங்களில் மலையடிவாரத்தில் நடமாடுவதால், விவசாயிகள் விவசாய நிலங்களுக்குச் செல்ல அச்சப்படுகின்றனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சிதம்பரபுரம் மலையடிவாரத்தில் உள்ள சத்திரங்காடு பகுதியில் சந்திரசேகரன் (55) என்பவருக்குச் சொந்தமான பனைமரத்தை காட்டு யானை சேதப்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இந்தத் தோட்டத்தில் 3 பனைமரங்களை இதே காட்டு யானை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
மலையடிவாரப் பகுதியில் ஒற்றை யானையின் நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா். அதை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.