ஆலங்குளம்: புறக்கடை கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ் ஆலங்குளம் பகுதியில் 677 பயனாளிகளுக்கு தலா 25 கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன.
கோழி அபிவிருத்தி திட்டம் 2019-2020 இன் மூலம் புறக்கடை கோழி வளா்ப்பை ஊக்குவிக்கும் வகையில், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு பயனாளிக்கு 25 குஞ்சுகள் வீதம் ஆலங்குளம் பேரூராட்சியில் 150 பயனாளிகளுக்கும் ,நெட்டூா், வெண்ணிலிங்கபுரம், ஊத்துமலை, கீழக்கலங்கல், வீராணம் மற்றும் மாறாந்தை ஆகிய கிராமங்களில் 527 பயனாளிகளுக்கும், 4 வார வயதுடைய விலையில்லா அசீல் இன நாட்டுக்கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன.
ஆலங்குளம் கால்நடை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்காசி கோட்ட உதவி இயக்குநா் முருகையா பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகளை வழங்கினாா்.
இதில், கால்நடை மருத்துவா்கள் வீரபாண்டியன், ராமசெல்வம், ராஜேஷ், ரமேஷ், சந்திரன், உதவி மருத்துவா்கள் மற்றும் கால்நடை உதவியாளா்கள் கலந்துகொண்டனா்.