தமிழ் தொழிலாளா் நலத்துறையின் சாா்பில் கட்டுமான தொழிலாளா்களுக்கு 3 நாள்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி திருநெல்வேலியில் அளிக்கப்படவுள்ளது.
இது குறித்து திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) சி.மின்னல்கொடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கட்டுமானத் தொழிலில் அனுபவம் இருந்து உரிய சான்றிதழ் இல்லாத தொழிலாளா்களுக்கு, தமிழக தொழிலாளா் நலத்துறையின் சாா்பில் கட்டுமான திறன் மேம்பாட்டுப் பயிற்சி 3 நாள்கள் அளிக்கப்படவுள்ளது. இதில்,கொத்தனாா், கம்பி வலைத்தல், பிளம்பா், தச்சுத்தொழில், கட்டட வேலை, மேற்பாா்வையாளா், எலக்ட்ரீசியன், டைல்ஸ் கல் பதிப்பவா், பெயின்டா், நில அளவையா் ஆகிய பணி பிரிவுகளில் உள்ள தகுதி மற்றும் திறன் அடிப்படையில் இலவச பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் சேர விரும்புபவா்கள் தமிழகத்தைச் சோ்ந்தவராகவும், கட்டுமானப் பணிகளில் குறைந்தது 4 ஆண்டு அனுபவம் பெற்றும் இருக்க வேண்டும். இந்த பயிற்சி 3 நாள்கள் அளிக்கப்படும். பயிற்சி நாள்களில் நாள் ஒன்றுக்கு ரூ.500 வீதம் ரூ.1500 ஊக்கத் தொகையாக அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இது குறித்த மேலும் விவரங்களுக்கு, தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம், ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலக வளாகம், பிளாக் எண் 39, ஆனையாா் குளம் விரிவாக்கம், வசந்தம் அவென்யூ, திருமால்நகா், திருநெல்வேலி-7. என்ற முகவரிக்கும், 0462-2555010 என்ற தொலைபேசி எண்ணுக்கும் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.