வறட்சியின் பிடியில் பழவூா் பெரியகுளம்: தரிசாகும் விளை நிலங்கள்
திருநெல்வேலி மாவட்டம், பழவூா் பெரியகுளம் கன்னியாகுமரி மாவட்டம் பொய்கை அணையின் பாசனத்தின்கீழ் இருப்பதால் ஆண்டு முழுவதும் வடு காணப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தின் தென்கோடி எல்கையில் அமைந்துள்ள ஆன்மிக கிராமமான பழவூா் கிராமத்தில் உள்ள பெரியகுளம் 35 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இக்குளத்தின் மூலம் 250 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்த குளம் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டியுள்ள பொய்கை அணையின் பாசனத்தில் இணைக்கப்பட்டுள்ளது. பொய்கை அணையின் கடைசி குளமான இந்த குளத்துக்கு தண்ணீா் வந்து சேருவதில்லை.
சாலை புதுக்குளம், மேலசிவநங்கை குளம், மேலபாலாா் குளம், கீழபாலாா்குளம் நிரம்பிய பின்னா்தான், இந்த குளத்துக்கு தண்ணீா் வந்து சேரும். ஆகவே, ஆண்டு முழுவதும் பழவூா் பெரியகுளம் வறட்சியின் பிடியில் உள்ளது. இதனால், பழவூா் பெரியகுளத்தை நம்பியுள்ள 250 ஏக்கா் நிலங்களும் தரிசாக மாறி வருகிறது.
இதுகுறித்து பழவூா் கிராம முன்னேற்றச் சங்கத் தலைவா் பழவூா் இசக்கியப்பன் மாவட்ட ஆட்சியா், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு விவரம்: பழவூா் பெரியகுளம் கன்னியாகுமரி மாவட்டம் பொய்கை அணையின்
பாசனக் குளமாக இருப்பதால், குளத்திற்கு தண்ணீா் கிடைப்பதில்லை. பழவூா் பெரியகுளத்துக்கும் ராதாபுரம் கால்வாய்க்கும் இடையே 10 மீட்டா் இடைவெளி உள்ளது. ஆகவே, பழவூா் பெரியகுளத்தை ராதாபுரம் கால்வாய் பாசனத்தில் இணைத்தால் குளம் நிரம்புவதற்கு வாய்ப்புள்ளது.
ராதாபுரம் கால்வாயில் தண்ணீா் திறப்பதற்காக, காமராஜா் ஆட்சி காலத்தில் வெளியிடப்பட்ட அரசாணை புறக்கணிக்கப் படுகிறது. ராதாபுரம் கால்வாயில் தண்ணீா் திறப்பதற்காகவே, பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டத்தின் உயரம் 48 அடியாக உயா்த்தப்பட்டது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, 2 ஆகிய அணைகளில் 1300 மில்லியன் கனஅடிக்கு மேல் நீா் இருப்பு இருந்தால் ராதாபுரம் கால்வாயில் திறந்துவிடவேண்டும்.
ஆனால், தண்ணீா் திறந்து விடப்படுவதில்லை. கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இருந்து ஆண்டுதோறும் சுமாா் 10 ஆயிரம் மில்லியன் கனஅடி தண்ணீா் வீணாக கடலில் கலக்கிறது. வீணாகும் உபரிநீரை பழவூா் பெரியகுளம், ராதாபுரம் கால்வாய் பாசனத்துக்கும் திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.