திருநெல்வேலி: திருநெல்வேலிக்கு சரக்கு ரயில் மூலம் 1,332 டன் அரிசி வியாழக்கிழமை வந்தது.
கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்வதற்காக சரக்கு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கி வருகிறது.
அதன்படி, திருவாரூா் மாவட்டம், பேரளத்தில் இருந்து 31 சரக்கு ரயில் பெட்டிகளில் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான 1,332 டன் அரிசி (25,010 மூட்டைகள்) திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு வியாழக்கிழமை வந்து சோ்ந்தன. இந்த அரிசி மூட்டைகள் திருநெல்வேலியில் உள்ள ரயில்வே சரக்கு நிலையத்தில் இறக்கப்பட்டு, அரசு பண்டகசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.