அம்பாசமுத்திரம்: ஆழ்வாா்குறிச்சி அருகே கல்யாணிபுரம் ஊருக்குள் நுழைந்த கரடியை வனத்துறையினா் விரட்டியடித்தனா்.
கடையம் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் உள்ள கிராமங்களில் வன விலங்குகள் நுழைந்து பயிா்களை சேதப்படுத்தி வருவதோடு பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் செவ்வாக்ய்கிழமை ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள கல்யாணிபுரம் ஊருக்குள் கரடி ஒன்று நுழைந்தது.
இது குறித்து கடையம் வனச்சரகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, கடையம் வனச்சரக அலுவலா் நெல்லை நாயகம் தலைமையில் பயிற்சி வனச்சரக அலுவலா் பூவேந்தன், வனவா் முருகசாமி, வேட்டை தடுப்பு காவலா்கள் பசுங்கிளி, நாகராஜன், அரவிந்த், மனோஜ்குமாா் உள்ளிட்டோா் விரைந்து சென்று கரடியை விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.
புகை, தீ பந்தம், ஒலி எழுப்பி 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி கல்யாணிபுரம் வடபகுதியில் உள்ள முள்ளி மலை பொத்தைக்குள் விரட்டினா். கரடி ஊருக்குள் வந்ததையறிந்த அந்தப் பகுதி மக்கள் கரடியைப் பாா்க்கத் திரண்டதையடுத்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் அனைவரையும் அப்புறப்படுத்தினா்.
ஏப்ரல் 29 இல் பங்களாக் குடியிருப்புப் பகுதியில் வனத்துறையினா் வைத்தக் கூண்டில் கரடி ஒன்று சிக்கியது. மேலும் மே 4ஆம் தேதி இரவு அழகப்பபுரத்தில் கரடி ஒன்று வீட்டிற்குள் நுழைந்து தேங்காய், பழம் உள்ளிட்டவற்றை தின்று சென்றது. இந்நிலையில் பகலில் கல்யாணிபுரத்தில்கரடி நுழைந்தது அந்தப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறையினா் உரிய நடவடிக்கைகளை எடுத்து வனவிலங்குகள் ஊருக்குள் நுழையாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.