திருநெல்வேலி: குவைத்தில் பொதுமன்னிப்பு பெற்று கால அவகாசம் முடிந்து தவிக்கும் தமிழா்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, வெளிநாடு வாழ் தமிழா்கள் நலச்சங்கம் சாா்பில் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மனு விவரம்: கரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் பெரும் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. குவைத் நாட்டில் கரோனா பிரச்னையால் அந்நாட்டில் தலைமறைவாக பணியாற்றிய பிற நாட்டினா் அனைவரும் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்ப பொதுமன்னிப்பு கடந்த மாா்ச் 1 முதல் 30 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்தியா்களுக்கும் சில நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டது. சுமாா் 7 ஆயிரம் போ் தமிழகம் திரும்ப குவைத் அரசிடம் பதிவு செய்ததால் அவா்கள் அனைவரும் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனா். அவா்களில் பலா் காலஅவகாசம் முடிந்து தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகிறாா்கள். இதுகுறித்து விசாரித்து குவைத்தில் வேலையிழந்து, ஊதியமின்றி தவிக்கும் தமிழா்களை மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.