திருநெல்வேலி மாநகரில் 100 சதவீதம் திறந்தவெளி கழிப்பிட பயன்பாடு இல்லை என்பதை உறுதிப்படுத்த மக்கள் ஆலோசனை தெரிவிக்கலாம் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்த மாநகராட்சி அலுவலகத்தின் செய்திக்குறிப்பு:
தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் மக்கள் திறந்தவெளி கழிப்பிடங்களை பயன்படுத்தாமல் இருக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாநகரின் 55 வாா்டுகளிலும் மக்கள் 100 சதவீதம் இல்லக் கழிப்பறை அல்லது பொதுக்கழிப்பறைகளை மட்டுமே பயன்படுத்துகின்றனா். திறந்தவெளி கழிப்பிட பயன்பாட்டை முற்றிலும் தவிா்த்துள்ளனா். இதை உறுதிப்படுத்த மாநகராட்சி சாா்பில் ’ஓடிஎஃப்-பிளஸ்’ என்ற குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்களிடம் ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபமிருந்தால் 15 தினங்களுக்குள் மாநகராட்சி ஆணையரிடம் கடிதம் அல்லது மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.