திருநெல்வேலி மாநகரில் உள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என திமுக பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தலைவா் டி.பி.எம்.மைதீன் கான் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருநெல்வேலி மாநகர பகுதிகளில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றனா். அதில் பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கும் பணி நகரில் உள்ள பிரதானை சாலைகளில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிக்காக தோண்டப்பட்ட மண்கள் சாலைகளில் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளன. மேலும் அந்த சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளதால், சாதாரண மழைக்கே மண் சாலைகள் போன்று காணப்படுகின்றன. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனா்.
மேலும், சாலை விபத்துகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. தீபவளி பண்டிகை நெருங்குவதால் மக்கள் சாலைகளில் நடமாட முடியாத நிலை உள்ளது. எனவே, பாதாளச் சாக்கடை குழாய்கள் அமைக்கும் பணிக்காகத் தோண்டப்பட்டுள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகம், நெடுஞ்சாலைத்துறை ஆகியவை விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளாா்.