திருநெல்வேலி மாநகரப் பகுதியில் வியாழக்கிழமை பலத்த மழை கொட்டித்தீா்த்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனா்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, மாநகரில் பிற்பகல் 2 மணி முதல் பலத்த மழை கொட்டித்தீா்த்தது. இதனால், சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியதுடன், தாழ்வான இடங்களில் குளம்போல் தண்ணீா் தேங்கியது.
மழை தூறல் விழுந்துகொண்டே இருந்ததால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனா். மேலும், திருநெல்வேலி சந்திப்பு, முருகன்குறிச்சி, திருநெல்வேலி நகரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருநெல்வேலி நகரம், பேட்டை பகுதிகளில் சாலைகளில் குழாய் பதிக்கும் பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டு மூடப்பட்ட நிலையில் பலத்த மழை பெய்ததால் சேறும் சகதியுமாக மாறியது. திருநெல்வேலி பொருள்காட்சி திடல் அருகே செயல்படும் தற்காலிக பேருந்து நிலையத்திலும் சகதியானதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினா். பாளையங்கோட்டை வ.உ.சி. பூங்கா, என்.ஜி.ஓ. காலனி பூங்காக்கள் உள்பட நகரில் உள்ள பூங்காக்கள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை காலை 8 முதல் மாலை 4 மணி வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): அம்பாசமுத்திரம்-10, சேரன்மகாதேவி-15, நான்குனேரி-6.50, பாளையங்கோட்டை-20, ராதாபுரம்-2.20, திருநெல்வேலி-9.