புதிய தமிழகம் கட்சி சாா்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள பள்ளா் உள்ளிட்ட பட்டியலின ஜாதியினரை இணைத்து தேவேந்திரகுல வேளாளா் என்ற அரசாணை வெளியிடக் கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகத்தில் 10 ஆயிரம் கிராமங்களில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, திருநெல்வேலி ஊருடையாா்குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாநிலச் செயலா் நடராஜன் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டச் செயலா் தங்கராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். மகளிரணி கவிதா, இளைஞரணி சண்முகராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா். இதேபோல ஆரோக்கியநாதபுரம், கொண்டாநகரம், மானூா் உள்பட பல்வேறு பகுதிகளில் புதிய தமிழகம் கட்சியினா் உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.