திருநெல்வேலியில் சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஓட்டுநருக்கு ஆயுள்சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திருநெல்வேலி அருகேயுள்ள குன்னத்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் (33). வேன் ஓட்டுநா். இவரது வேனில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த 5 வயது சிறுமி தினமும் தச்சநல்லூரில் உள்ள பள்ளிக்குச் சென்று வந்தாராம். கடந்த 8-6-2016 இல் சிறுமியிடம் பெருமாள் பாலியல் வன்முறையில் ஈடுபட்டாராம்.
சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி நகரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பெருமாளை கைது செய்தனா். இவ்வழக்கு திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, குற்றஞ்சாட்டப்பட்ட பெருமாளுக்கு ஆயுள்சிறைத் தண்டனை விதித்தாா். மேலும், சிறுமியின் குடும்பத்திற்கு பெருமாள் தரப்பில் ரூ.1.25 லட்சமும், அரசு தரப்பில் ரூ.2.35 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் ஜெபஜீவா ஆஜரானாா்.