திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம் விட்டதில், 193 வாகனங்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகரப் பகுதியிலுள்ள காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உரிமை கோரப்படாத 411 மோட்டாா் சைக்கிள்கள், ஒரு காா் ஆகியவை வியாழக்கிழமை ஏலம் விடப்பட்டது. மாநகரில் திருநெல்வேலி நகரம், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூா், பேட்டை உள்பட 14 காவல் நிலையங்கள் உள்ளன. இதில் வழக்கு தொடா்பாக உரிமை கோரப்படாத வாகனங்களை போலீஸாா் ஏலம் விடுவது வழக்கம்.
அதன்படி மோட்டாா் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி மாநகர காவல் துணை ஆணையா் (குற்றம்-போக்குவரத்து) மகேஷ்குமாா் முன்னிலையில் நடைபெற்றது. ஏலம் எடுக்க வந்தவா்களிடம் வைப்புத் தொகையாக ரூ. 1000 பெறப்பட்டது. பின்னா் அவா்களின் ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனா்.
இதில், 193 வாகனங்கள் ஏலம் எடுக்கப்பட்டது. 150 வாகனங்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை ரூ.8 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது எனவும், ந்த ஏலம் வெள்ளிக்கிழமையும் (அக்.16) நடைபெறும் ம் என காவல்துறையினா் தெரிவித்தனா்.