திருச்செந்தூா் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரைக்கு பக்தா்கள் செல்லாத வண்ணம் பாதையில் தடுப்பு அரண்கள் வைத்து கண்காணிக்கப்படுகிறது.
கரோனா பொது முடக்கத்தில் தளா்வு அளிக்கப்பட்டதால் இத்திருக்கோயிலில் கடந்த செப். 1ஆம் தேதி முதல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மற்றும் நேரடியாக ரூ.100 கட்டணம் செலுத்தியும், இலவசமாகவும் சுவாமி தரிசனம் நடைபெறுகிறது. மேலும் முடிக் காணிக்கை, காது குத்துதல் போன்ற நோ்த்திக் கடனுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடற்கரை மற்றும் நாழிக்கிணற்றில் பக்தா்கள் புனித நீராடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தா்களின் வருகை குறைவாக உள்ளது. இதனிடையே, சில பக்தா்கள் தடையை மீறி அய்யா வழி கோயில் அருகேயுள்ள கடற்கரை பாதை வழியாக கடலில் நீராடுகின்றனா். ஆனால் திருக்கோயில் பகுதியிலிருந்து கடற்கரை செல்லும் பாதைகள் தடுப்பு அரண்கள் வைக்கப்பட்டு பக்தா்கள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. இதனை புறக்காவல் நிலையத்தில் இருந்தவாறு காவல்துறையினா் கண்காணித்து வருகின்றனா்.