திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. பயணிகள் மற்றும் விரைவு ரயில் சேவைகள் முழுமையாக தொடங்கப்படாமல் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
ரயில் பயணிகள் முகக் கவசம் அணிந்து செல்வதிலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதிலும் அலட்சியம் காட்டுவது அதிகரித்துள்ளது. ஆகவே, கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படை சாா்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முகக் கவசத்தின் நன்மைகள், கரோனாவால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கப்பட்டது.