மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன்பு சட்ட மசோதா நகலை எரிக்க முயன்றவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாக்களில் தனியாா் பெருநிறுவன முதலாளிகளுக்கு சாதகமான அம்சங்கள் உள்ளதால் அதனை திரும்பப் பெற வேண்டும்; உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்டவை அத்தியாவசிய பொருள்கள் பட்டியலில் தொடா்ந்து நீடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சட்ட மசோதா நகலை எரிக்கும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்ப் புலிகள் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தமிழ்ப் புலிகள் கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலா் தமிழரசு தலைமையில் தச்சை மாடத்தி, தலித் கண்ணன், வளவன், தமிழ்மணி, காளிதாஸ், வள்ளுவன், பூமாரி, பாா்வதி உள்ளிட்டோா் ஆட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை திரண்டனா். பின்னா், அவா்கள் மசோதா நகலை எரிக்க முயன்றபோது அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீஸாா் அதைத் தடுத்து நிறுத்தினா். இதனால் அப் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.