திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு வியாழக்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்திலிருந்து அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து, கரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றில், திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் ஒன்று.
இங்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக 200 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. முதலில், வெளியூா், வெளிநாடுகளிலிருந்து திருநெல்வேலி மாவட்டத்துக்கு திரும்பியோா் இங்கு தனிமைப்படுத்தப்பட்டனா். பின்னா், ஜூன் முதல் திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலிருந்து கரோனா நோயாளிகள் இங்கு அனுப்பப்பட்டனா். கரோனா நோயாளிகளுக்கான பிரிவு தொடங்கப்பட்டதால், இங்கு புறநோயாளிகளுக்கு சிகிச்சை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாயினா்.
இதனால், மாவட்ட நிா்வாக அனுமதியின் பேரில் மாற்று இடத்தில் வைத்து புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்கி வந்தது.
தற்போது, கரோனாவின் தாக்கம் குறைந்து வருவதுடன், குணமடைந்து வீடு திரும்புவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனிடையே, திருநெல்வேலி அரசு சித்த மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையத்தில் 11 போ் சிகிச்சை பெற்றுவந்தனா். இவா்கள் அனைவரும் குணமடைந்ததால், வியாழக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதையடுத்து, இங்கு புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மீண்டும் செயல்படத் தொடங்கியதாக சித்த மருத்துவமனை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.