திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளஅஞ்சலகங்களில் திங்கள்கிழமை முதல் (ஆக. 9) தங்கப் பத்திரங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.
இது தொடா்பாக திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் கோ.சிவாஜி கணேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசு தங்கப் பத்திரம் திட்டத்தை ரிசா்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. தங்கப் பத்திர விற்பனை திங்கள்கிழமை முதல் (ஆக. 9) 13-ஆம்தேதி வரை நடைபெறவுள்ளது. ஒரு கிராம் விலை ரூ. 4,790. தனி நபா் ஒரு நிதியாண்டுக்கு குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம். மேலும், முதலீட்டுத் தொகைக்கு 2.5 சதவீத வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிா்வடையும்போது அப்போதைய விலைக்கு நிகராக பணமும் பெறலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பான் காா்டு, ஆதாா், வாக்காளா் அடையாள அட்டைகள், பாஸ்போா்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் நகல், தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றைக்கொண்டு தங்கப் பத்திரத்தை அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் பெறலாம் என்றாா் அவா்.