திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்திட குழு அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளஅனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளின் கட்டடங்கள் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்திட 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சிப் பகுதியில் 4 குழுக்களும், ஊரகப் பகுதிகளில் 14 குழுக்களும் ஆய்வுப் பணியில் ஈடுபடும். இந்தக் குழுவில் வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, திருநெல்வேலி மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, கல்வித் துறை ஆகிய துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் மற்றும் பொறியாளா்கள் இடம்பெற்றுள்ளனா்.
இந்தக் குழுக்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆய்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள அனைத்து அலுவலா்கள் மற்றும் பொறியாளா்கள் கலந்துகொண்டனா்.
இந்தக் குழுக்கள் தங்கள் ஆய்வுப் பகுதிக்குள் அமைந்துள்ள அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள கட்டடங்களை ஆய்வுசெய்து விரிவான அறிக்கையை சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
90 கட்டடங்களை இடிக்க உத்தரவு:
மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 18 குழுக்கள் பள்ளிகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ஆய்வுப் பணியானது திங்கள்கிழமைக்குள் முடிக்கப்படும். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஏற்கெனவே ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் 90 பழைய கட்டடங்கள் இருப்பது கண்டறியப்பட்டு, அவற்றை இடிப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றாா்.