சீருடையில் பொருத்தக்கூடிய நவீன ரக கேமராக்கள் திருநெல்வேலி மாவட்ட போலீஸாருக்கு வழங்கப்பட்டன.
திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன், இந்த கேமராக்களை காவல்துறையினருக்கு வழங்கினாா்.
காவலா்கள் தங்கள் சீருடையில் இத்தகைய கேமராக்களை பொருத்திக்கொண்டு பணியாற்றும்போது, அந்த இடத்தில் நடைபெறும் சம்பவங்களினின் விடியோ காட்சிகள், புகைப்படம் போன்றவை பதிவாகிவிடும்.
குறிப்பாக, வாகனச் சோதனை, மனு விசாரணை, ரோந்துப் பணி, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகளுக்கும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். முதற்கட்டமாக, மானூா், நான்குனேரி, களக்காடு, சுத்தமல்லி, வள்ளியூா் ஆகிய ஐந்து காவல்நிலையங்களுக்கு தலா மூன்று விதம் 15 கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.