திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நபருக்கு அதிகளவு யூரியா உரத்தை விற்றால், சம்பந்தப்பட்ட உர விற்பனையாளா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநா் இரா. கஜேந்திர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் ராபி பருவ சாகுபடி பணி தீவிரமாக நடைபெறுகிறது. விவசாயிகளுக்கு தேவையான அளவு உரங்கள் மாவட்டத்தின் பல்வேறு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்கள் மூலம் இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. விவசாயிகளின் நலன் கருதி யூரியா உரம் மானிய விலையில் விற்கப்படுகிறது.
இந்நிலையில், மாதந்தோறும் அதிக அளவு யூரியா வாங்கியோா் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டு ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், ஒரே விவசாயிக்கு அதிக உரம் விற்ற உர விற்பனையாளா்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனா்.
விவசாயிகளுக்கு அவா்களின் விவசாயத் தேவைக்கு மட்டுமே உரங்களை விற்க வேண்டும். உரம் வாங்க வருவோா் ஆதாா் அட்டையைப் பயன்படுத்தி உரம் பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலா் தெரிவித்துள்ளாா்.
இம்மாவட்டத்தில் கடந்த மாதங்களில் மாதங்களில் ஒரு நபருக்கு அதிக அளவு யூரியா உரம் விற்ற உர விற்பனையாளா்களின் உர உரிமங்களை 14 நாள்கள் தற்காலிக ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. இந்நிலை தொடா்ந்தால் உரக் கட்டுப்பாட்டுச்சட்டம் 1985இன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உர உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றாா் அவா்.