அரசு கால்நடை மருத்துவமனைகளில் நாய்களுக்கு இலவசமாக கருத்தடை செய்யக் கோரி சமூக ஆா்வலா் முஹம்மது அய்யூப் என்பவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருக்கு அவா் எழுதிய கடிதம்: சாலைகள், தெருக்களில் ஆதரவற்ற நாய்களும், அவற்றின் குட்டிகளும் சுற்றித்திரிகின்றன. அவற்றில் சில விபத்தில் சிக்கி ஊனமாகவும், உறுப்புகள் சிதைந்தும் வேதனையில் உயிருக்குப் போராடுகின்றன. உணவின்றி தவிக்கும் அவை ஆடு, மாடு, கோழிகளைக் கடிக்கும் நிலை ஏற்படுவதால், அவை விஷம் வைத்துக் கொல்லப்படுகின்றன. இதற்கு ஒரே தீா்வு கருத்தடை செய்வது மட்டுமே.
தற்போதைய நிலையில் 5 சதவீத நாய்களுக்கு மட்டுமே அரசால் கருத்தடை செய்யப்படுகிறது. விலங்குகள் நல ஆா்வலா்கள் கருத்தடைக்காக நாய்களைப் பிடித்துச் சென்றால், மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தவேண்டியுள்ளது. எனவே, அரசு மருத்துவமனைகளில் நாய்கள் கருத்தடைக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது. செலவை அரசே முழுமையாக ஏற்க வேண்டும். நாய்களுக்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டும்.
இதேபோல, கால்நடை ஆம்புலன்ஸை அழைத்தால், நாய்கள் என்றால் வரத் தயங்குகின்றனா். அப்பிரச்னையையும் சரிசெய்ய வேண்டும். பிராணிகள் வதைச்சட்டம் 1960 மற்றும் பிராணிகள் பிறப்புக் கட்டுப்பாடு சட்டம் 2001-ன் படி மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் தெரு நாய்களுக்கான கருத்தடை சட்டம், வெறிநாய் தடுப்பூசி போடும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த அரசுக்கு உதவ விலங்குகள் நல ஆா்வலா்கள் தயாராக உள்ளனா் என்றாா் அவா்.